Tuesday, June 21, 2011
Monday, June 20, 2011
-தி.கண்ணன்
எழுதுகோல் எமது செங்கோல்
எழுதுகோல் செதுக்கிடும் செங்கோல் ,
வள்ளுவனின் விரலில் வாழ்ந்த
கம்பனின் கையில் கவிபாடிய
ஆறாவது அறிவில் முகிழ்த்த - அந்த
ஆறாவது விரல்
அலைக்கற்றைகளையும் , இனப்படுகொளைகளையும்
வரைந்தது -செங்கோல் தலை கவிழ்ந்தது -அந்த
எழுதுகோல் எமது செங்கோல் .
பனிப்பளிங்கினைச் சுமக்கும்
தண்ணீர்க்குடம் சுமந்த கன்னி எனும்
புல்லினழகை - எழுதும் ,
எனது எழுதுகோல் எமது செங்கோல் .
குளத்து நீரில் , நிலவு தோசை சுடும்
தாமரை இதழை - எழுதும் .............
கன்னிமலரிதழில் மலரும் கனவுப்பூக்கள்போல்
காற்று விரல்களால் , மூங்கிலினுள் ஊடாடி ,
புல்லாங்குழல் இசை இசைக்கும்
ராகத்தை - எழுதும் ...........
கும்பிக்காய் , கூழ்தேடி வாடும்
குடிசைகளின் வியர்வை பேசும் - என்
எழுதுகோல் எனது செங்கோல் .
------------தி.கண்ணன்
எமது செங்கோல்!
வெண்மைநிறத் தாளாம்எம் விரியும் நாட்டில்
.. வெவ்வேறு மாநிலமாய் விளங்கும் நூல்கள்!
கண்ணினமும் செவியினமும் கலந்து வாழும்
.. கலகமிலாப் பொன்நாடு காண்எம் நாடு!
வண்டுலவும் வழியெல்லாம் வழியும் தேன்போல்
.. வளர்ந்துவரும் திருநாட்டின் வழிக ளெல்லாம்
எண்ணமதைத் தேனாக்கி எழுதுங் கோலே
.. இந்நாட்டைக் காக்கின்ற எமது செங்கோல்! (1)
எழுதாத தாள்களெலாம் எமக்காய் வாழும்!
.. என்றெந்தன் கோல்பதியும் என்றே ஏங்கும்!
விழுதாயெம் எண்ணங்கள் விளங்கும் போதில்
.. விசித்திரமாய் உருமாறும், விலையும் போகும்;
பழுதாயும், கோல்நடந்த பரப்பை எல்லாம்
.. பத்திரமாய்க் காத்திருக்கும் பதிந்த தாள்கள்!
முழுதாய்எம் வாழ்க்கையெலாம் முடிந்த போதும்
.. முத்தான எழுத்துக்கு மூச்சாய் நிற்கும்! (2)
பார்வைமரம் தரும்செய்தி பறித்து வந்து
.. பக்குவமாய் அதைஅரைத்துப் பழகும் மூளைக்
கூர்மைதரும் கருத்தெல்லாம் கூட்டி கூட்டிக்
.. குழைத்ததனில் மெய்சேர்த்துக் குழம்பாய் ஆக்கி
நேர்மையெனும் கலத்திலதை நிரப்பி வைத்து
.. நிஜம்மெல்ல நகர்கின்ற நேரம் மையாய்ச்
சேர்த்தெழுத்தைத் தாள்பதித்து தேச மெல்லாம்
.. சேர்க்கின்ற பணிசெய்யும் தேர்ந்த செங்கோல்! (3)
ஏற்றங்கள் தடுமாறும் எங்கோ அங்கே
.. எழுதிஅதைச் சீர்படுத்தும் எங்கோல் செங்கோல்!
மாற்றங்கள் இன்றியுளம் மங்கும் அங்கும்
.. மணிதீபம் ஏற்றிவைக்கும் எங்கோல் செங்கோல்!
சாற்றுங்கால் மாதவனின் சங்காய் ஓங்கும்
.. சக்தியொலி எழுப்புகின்ற எங்கோல் செங்கோல்!
காற்றெங்கே அங்கெல்லாம் கங்காய்த் தங்கி
.. கருத்தையுளம் நிரப்புகின்ற எங்கோல் செங்கோல்! (4)
வெற்றிடத்தில் சிந்தைதரு வித்தை யிட்டு
.. வெள்ளாண்மை விளைவிளைக்கும் வித்தை செய்யும்;
விற்பனத்தை வேற்றார்க்கு வெள்ளைத் தாளில்
.. வெளியிட்டு விளையாடும் விரலின் நண்பன்;
சொற்றடத்தில் கண்பார்வை சொக்கச் செய்து
.. சொல்லுக்கோர் பொருள்கொடுக்கும்; சுவைக்கும் நெஞ்சின்
கற்பனைக்கு வடிகாலாய்க் காட்சி தன்னை
.. காகிதத்தில் கையெழுத்தாய்க் காட்டும் கோலே! (5)
செல்வன் மிருதுன் மணிகண்டப்பிரபு
கதிரொளி வந்தால் கலை விடியும் ,
காரிருள் குவிந்தால் கனமழை பொழியும்
தமிழுக்கு தடயம் திருக்குறள்
தமிழனின் தந்தை வள்ளுவன்
வான்புகழவள்ளுவம் வடித்து-தந்த
எழுதுகோல் எமது செங்கோல்
செஞ்சொல் கவிதைகள் ஏட்டிலே
விஞ்சும் புகழ் தமிழ் நாட்டிலே
பேச்சில் மூச்சில் கவிதையை
தவமாய் கொண்ட பாரதியின்
எழுதுகோல் எமது செங்கோல்
அன்பின் முகவரி கொண்டு
அடுக்கு மொழி பேசி தமிழை
புத்துணர்வு தந்த எங்கள்
அறிவின் முதல்வன் அண்ணா
எழுதிய கோல்எமது செங்கோல்
Saturday, June 18, 2011
வாசல் வசந்தப்பிரியன் -தலைவர் ,வாசல் கவிதை அமைப்பு
எழுதுகோல் எமது செங்கோல்
கவிஞ்ர்கள் கழகம் தொடங்கவேண்டும் !
கவிஞ்ர்கள் அத்துணை பேரும் அதில் அடங்கவேண்டும் !
ஆட்சியில் பங்கு கேட்காதோரிடம் கூட்டணி வைக்க வேண்டும்
தனித்தே ஆட்சிஅமைக்கும் எண்ணிக்கையில் போட்டியிட வேண்டும் !
"கவிஞ்ர் " என்ற பெயரில் தனித்தொலைக்காட்சி"சேனல் " வேண்டும்
எழுதுகோல் எமது செங்கோல் என்று அறிக்கை ஒன்று விட வேண்டும்
'எல்லோரும் இந்நாட்டு மன்னர் 'என்பதை நிரூபிக்க
எல்லா மக்களுக்கும் ஒரு எழுதுகோல் இலவசமாகத் தரவேண்டும் !
பட்டுக்கோட்டையின் பாட்டுவரிகள் கோட்டையில் முழங்கும்
கவர்னர் உரை முழுவதும் கவிநயம் ஜொலிக்கும் !
எழுதுகோல் தினம் பிடிக்கும் எனதருமை நண்பர்களே !
எழிற் கவிதை தினம் வடிக்கும் என் இனிய கவிஞ்ர்களே !
எழுதுகோல் எமது செங்கோல் என்பதை ஒவ்வொரு முறை
உச்சரிக்கும் போதே
ஆட்சியே உங்கள் கைக்கு வந்துவிட்ட
அதிசயத்தை அனுபவிப்பிர்கள் !
எழுதுகோல் எமது செங்கோல் என்ற
என் உ தடுகளின் உச்சரிப்புக்குப் பின்னால்
ஆட்சி ஒன்று மலரும் அதிசயம் தெரிகிறது !
எழுதுகோல் ஒன்று செங்கோலாய் மாறும்
காட்சி ஒன்று கண்முன்னே சாட்சி ஆகிறது !
Friday, June 17, 2011
அரங்கத் தலைவர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன்
கவிதை நமது செங்கோலாய்க்
கருதி வந்த கவிஞ்ர்களே
செவியைத் தந்தோம் உம்மிடமே
சிந்தை நிற்கும் உம்மிடமே
புவியை ஆளும் புலமையினால்
பூவின் மணத்தைத் தருவீரே !
சுவைக்க நாங்கள் இருக்கின்றோம்
சொல்ல வாரீர் கவிதைகளை
கவிதைச் செங்கோல் ஏந்தியவர்
காணும் உலகின் கயமைகளை
புவியில் நீக்க முனைவார்கள்
புதுமை படைக்க எழுவார்கள்
குவியும் அன்பால் எழுத்தெல்லாம்
கூவும் குயிலால் எதிரொலிக்கும்
எவரும் நாங்கள் பெற்றிடவே
என்ன சொல்லப் போகின்றீர்
Wednesday, June 15, 2011
எழுதுகோல் எமது செங்கோல்
நீதி காத்த மன்னர்களின்
செங்கோல்
பிரதி எடுக்கப்பட்டு
நீதிமன்றத்தில் டவாலியிடமும்
கலெக்டரின் டபேதாரிடமும்
தரப்பட்டுள்ளது
செங்கோல்
சீருடையின் ஓர் அங்கம்
நீதிமன்றங்களில்
நீதிபதிகள்
கருத்து கந்தசாமிகளாய்
மாறிப்போனர்கள் !
செங்கோல்
எழுந்து நிற்க முடியாமல் தள்ளாடும்
ஜனநாயகத்தின் மன்னர்களுக்கு
கைத்தடி!
உரிமைகேட்டுப் போராடுபவர்களை விரட்ட
போலீஸ் கையில் கொடுக்கப்பட்ட
லத்தி !
கட்டப்பஞ்சாயதுக்காரர்கள் கையில்
உருட்டுக்கட்டை !
அரசியல் சட்டத்தின் ஒட்டைகளிலேயே
நீதிபரிபாலனங்கள்
மன்னர்களின் கஜான மந்திரிகள்ளலேயே
கொள்ளையடிக்கப் படும் வினோதம் !
வாருங்கள் கவிஞ்கர்களே!
எட்டயபுரத்தானின் எழுத்தின் ஈரத்தில்
உங்கள் எழுதுகோலை நனையுங்கள்
ஜனநாயகத்தின் மூன்று தூண்களும்
உளுதுப்போனத்தால்
எழுதுகோல் தான்
இனி மற்றுத்தூண் !
கடைக்கோடி மனிதனின்
கவலைகளை உங்கள்
கருவில் ஏற்றுங்கள் .....
உங்கள் எழுதுகோல்
ஒவ்வொரு முறை
கவிழும்போதும்
நிமிர்துநிற்கும் செங்கோலாய் !
புதியவிதிகளோடு விடியலுக்காய் !
-இளசை கிருஷ்ணமூர்த்தி
Monday, June 13, 2011
Subscribe to:
Posts (Atom)