வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Monday, August 15, 2011

வாசல் வசந்தப்பிரியன் கவிதை

சிறகுகளின் சுதந்திரம் பறிபோனதால்
உறவுகளை விட்டுப்பிரிந்து
தனிமையில் கூண்டுக்கிளி

மலருக்கு மல்ர் தாவும் வண்டுக்குக்கூட
உறவுக்குக் கைகொடுப்பது
சுதந்திரச் சிறகுகள்தானே

சிறகுகள் சுதந்திரமாய் விரிவதால்
தொலைதூர வான் பயணம்
உறவுகளின் சந்திப்பு வேடந்தாங்களில்

வேடன் குறி தப்பவில்லை
சிறகுகள் செயலிழப்பு
பறவி உயிர் பறந்தது சுதந்திரமாய்

முதியோர் இல்லத்தில் தாய் பறவை
சேர்த்துவிட்டுப் பறந்தது சேய்ப்பறவை
உறவின் பிரிவுக்கு சுதந்திரச் சிறகுகளா?

சிறகடித்துப்பறந்தது
சமாதான வெண்புறா
வான்வெளிச் சுதந்திரம்

சிறகுகளின் சேதாரம்
அக்கினியிலிருந்து விடுபடமுடியா
ஃபீனிக்ஸ் பறவை

சங்கமித்தன உறவுகள்
விரிந்தன சுதந்திரச் சிறகுகள்
பறவைகளாய் மணமக்கள்

ஓங்கிநின்றது சகோதர பாசம்
இடையில் வந்தது சொத்துப்பிரச்சனை
சிறகடித்துப் பிரிந்தன உறவுகள்

உறவுகள் அனைத்தும் பறவைகளே
ஒருநாள் விரிக்கும் அவை
சுதந்திரச் சிறகுகளே

கன்னிக்கோயில் இராஜா கவிதை

சுதந்திரக்கொடி ஏற்றப்படுவதற்குமுன்பே
சுரண்டப்பட்டுவிட்டது இந்தியப்பொருளாதாரம்
தீவிரவாதம்,மதவாதம் கூடிப்போராடின
நட்புக்களின் கூட்டணியில்

சுதந்திரச்சிறகுகளில் முடுக்கப்பட்ட
அடிமை விலங்குகள் அனைத்தும்
மெல்ல மெல்ல விடுவிக்கப்பட்டன
பிறிதொரு நாளில்

தாத்தா காந்தி மாமா நேரு
போராட்டங்களுக்கு பின்னே
மிக நீண்ட வரிசையாய் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
சுதந்திரத் தியாகிகள் இன்று வரை

நம் உறவுகள் சுதந்திரச் சிறகுகளை
அறுத்தெந்த காலந்தொட்டு
இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
சாலை சீரமைப்பு முதல் சமச்சீர்கல்வி வரை

கவிமாமணி வாசல் எழிலன்

                                                              உறவுகள் சுதந்திர சிறகுகள்                                               


சாதனையைச் செய்வதற்கும் உலக மெல்லாம் 
             சமத்துவமாய் ஆவதற்கும்  எழுந்து நிற்கும் 
வேதனைகள் இல்லாமல் போவ  தற்கும் 
             விடிவினையே எல்லோரும் உணர்வ தற்கும்          
நாதத்தை மீட்டிடவே முயறு கின்ற 
             நல்லோராய்  நாமெல்லாம்  ஆவதற்கும்
சீதனமாய் உறவுகளைப் பெருக்க வேண்டும்                         
              சிறகுகளாய்ச்    சுதந்திரமே  ஆதல் வேண்டும்  

புள்ளியினை வைத்துவிட்டால் கோலம் போடும் 
             புவியினிலே நாமெல்லாம் இருப்பதாலே 
வெல்லுகின்ற உள்ளத்தைக்  கூட்டு கின்ற 
             விடிவெள்ளி  போலிங்கே எழுவ தற்கும்                                            வல்லவரை  நாமெல்லாம்  ஆவ தற்கும்
              வழியினையே காட்டுவோராய் நிற்ப தற்கும்     
உள்ளங்கள் ஒன்றுபட்டு நிற்றல் வேண்டும்
               உறவுகளே சிறகாக  இருத்தல் வேண்டும்

சிந்தனைகள் செழிக்கின்ற சிறகி ருக்க 
               செந்தமிழாய் மனமெல்லாம்  சிறப்ப தற்கும்  
  பந்தமென எல்லோரும்  பழகு கின்ற
                 பக்குவமே எங்கெங்கும் இருப்ப தற்கும்
  விந்தையினைச்  செய்கின்ற சுதந்தி  ரத்தை
                 வியனுலகம் பெற்றிருக்க வேண்டு மய்யா !

 உறவுகளே  உள்ளத்தில் ஒளியாய் ஆக
          உண்மையினை எல்லோரும் உயர்வாய் ஆக்க
கரையில்லா நெஞ்சதனைக் காலமெல்லாம் 
         கலங்காமல் என்றென்றும் நிலைத்திருக்க 
நிறைவினையே பெற்றவராய் வாழ்திருக்க
         நேசத்தை எந்நாளும் நினைத்தி ருக்க
   உறவுகளே சிறகுகளாய் இருத்தல் வேண்டும்
           உறவெல்லாம் உயர்வினையே கொள்தல் வேண்டும்      

Saturday, August 13, 2011

கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி



கவிஞர் தி. கண்ணன்

சுதந்திரச் சிறகசைத்து 
சுழன்று ஆடுகின்றன 
இலைகள் 

தலைகீழாய்த் தொங்கி
ஊஞ்சலாடி மகிழ்கின்றன 
விழுதுகள் 

விசும்பின் வர்ணத்தைப்போல் 
வெளியெங்கும் 
தலையசைத்தாட்டி 
பசுமையால் 
கோடரிகளை வரவேற்று 
வீழ்கின்றன மரங்கள் 

கோபக் கோடரியில்
துன்பச் சூறாவளியில்
இன்னல் பேய்மழையில்
புவியெங்கும் வீழும்
மரங்கள்
மீண்டும் மீண்டும்
உயிர்தரித்து சிறகசைக்கின்றன
ஒவ்வொரு மரத்தினடியிலும்
உறங்காது காக்கும்
வேர்கள்!

துயரக் கழுகுகள் தீண்டாதபடி
உறவெனும்
சிறகுகளின் கூட்டுக்குள்
இலைகளும் விழுதுகளும்
கோழிக்குஞ்சுகளாய் !

இளசை கிருஷ்ணமூர்த்தி

உறவுகள் சுதந்திரச் சிறகுகள் 

தீவுகளாய் மாறிப்போன 
சமூகத்தில் 
தோப்பைப் பற்றிய கவலை 
அர்த்தமற்றது 

பரஸ்பர எதிர்பார்புகளுடனேயே 
உறவுகளின் 
ஊசலாட்டம் 

பழைய நியதிகளில் 
புதிய தலைமுறையை 
பயனிக்கச்சொல்ல
விலங்கிடப்பட்டதாய்
சுதந்திரத்தைபற்றிய
சிந்தனைகள் 

வேர்களைப்பற்றி 
அக்கறைகொள்ளாத விழுதுகள் 

விழுதுகளுக்கு நீர்தர மறுக்கும் 
வேர்கள் !

உறவு மரம் 
காட்சிப்பொருளாய்

மரங்களை ஓட்டுவதற்கு 
பெவிகால் இருக்க 
மனங்கள் தாமரை இலைமேல் 
நீர்போல 

மூன்று படுக்கையறை 
பளபளக்கும் தரை 
குளிர்சாதனவசதி
வென்நீருக்கும்,நன்நீருக்கும் 
கருவிகள் 
வடிவான மேசை நாற்காலிகள் 
அழகாய் இருந்தது வீடு 
உயிர்ப்பு இல்லாத காற்றோடு 
வெற்றிடமாய் ...
வளசைபோதலாய் 
வேறுநாடு சென்றவர்கள் 
அங்கேயே தங்கிவிட 
தாய்ப்பறவையின் தவிப்பு 

கலாச்சாரமாற்றத்தில் 
காணமல் போனது 
உறவுகளின் உன்னதம் 

Sunday, August 7, 2011

கவிஞர் கழுகுமலை ஸ்ரீகாந்த்

உராய்தளுக்கும் உயவுகளுக்கும்
உட்பட்டது உறவு.

முத்தப்பர் எனச் சொல்லி
முன்னவர்,
பின்னவர் சிறகுகள் ஒடிப்பின்
வெப்ப நாடிகள் முன்னவர்
வெளித் தோல்களைச்
வடுவாய் மாறிச் சுடும்.

நான்கு பேர் மத்தியில்
நாற்காலியில் அமரக் கூட
சுய சிறகுகள் இழந்து
சுருதியற்ற கூடுகள் போடும்
கோலங்கள் தேவையா?

விட்டொழிப்பாய் நண்பனே,

தமிழ்,

தலைவர்களை நம்பி
தலை கவிழ்ந்ததில்லை

வெட்ட வெட்ட முளைக்கும்
உனது சிறகுகள் – தமிழுக்காய்
அவை சட சடவென, பட படவென
அண்ட வெளிதனில் பறக்கட்டும்.

தோழனே,

நம் மொழி
மெல்ல மெல்லச்
செத்திடச் செத்திடச்
செய்வோர் முன்
சேவகம் புரிந்திடுமோ?

ஒராயிரம் ஆதவனில்
ஒன்றைப் பற்றிக் கொண்டோர்
அகண்ட வெளிதனில்
அகிலத்தினை வென்றதாய்
திளைத்திருந்தால் – அவர்தம்
விட்டத்துப் பூனையும்
எலியின்றிச் சாகும்
வெற்று நிலையும்
வெகு தூரத்தில் இல்லை
என உணர்வார்.

உறவின் சிறகுகள்
சுதந்திரம் தந்ததில்லை
வெட்டித் தொலைப்பாய்
அதை நீ.

இறகினும் மெலிதான தமிழ்
உன் சிறகினில் இணைத்து
அண்ட வெளிதனில்
ஆனந்தக் கூத்தாடுவாய்.

புறப்படு

உராய்தளுக்கும் உயவுகளுக்கும்
உனது உட்பட்டது உறவு.

உயவுகளின் தன்மை பெருக்கி
உராய்தல் களை ஒழித்திடுவாய்.